
இந்த கேள்விக்கு நியாயமான பதிலாக சொல்வதென்றால், நிட்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் உலகம் என்றால் 195 நாடுகளை கொண்டது. சுமார் பத்து நாடுகளே பங்கேற்கும் ஒரு விளையாட்டை, அதிலும் குறிப்பாக ஆங்கிலோயர் தங்களின் ஆளுகையின் கீழ் அல்லது அடிமை நாடுகளாக வைத்திருந்த நாடுகள் மட்டுமே பங்கெடுக்கும் ஒரு விளையாட்டை, நாம் தலையின் மேல் வைத்துக்கொண்டு "உலக கிரிக்கெட் போட்டி", "உலக கோப்பை" என்றெல்லாம் சொல்கிறோம். உலக நாடுகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது இது, பத்து சதவிகிதம் கூட இல்லை. ஆக பத்து சதவிகிதத்திலும் குறைவான நாடுகளே கலந்துகொள்ளும் ஒரு விளையாட்டிற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியதுவமென தெரியவில்லை. இதனால் இந்தியாவில் பிற விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் இல்லாமலே போய்விட்டது.
ஒரு காலத்தில் ஹாக்கியில் ஜாம்பாவனாக இருந்த இந்தியா, இன்று அதை இழந்து விட்டது. உலக அளவில் முக்கியத்துவம் உள்ள கால்பந்திற்கு இந்தியாவில் எந்த அளவிற்கு ஆதரவு உண்டு? இந்த கிரிக்கெட் விளையாட்டை ஒகோ என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் பிற விளையாட்டு வீரர்கள் சோர்ந்தே போய் விடுகிறார்கள்.
ஆனால் இந்த விளையாட்டை நமக்கு படித்து தந்த இங்கிலாந்தில் நிலைமை இப்படியல்ல. இங்கு கால்பந்த்திற்கு, கிரிக்கெட்டிற்கு, டென்னிஸ்ஸிற்கு என எல்லாவற்றையுமே ரசிக்கும்படியாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் என்பதை விட கிரிக்கெட் "வெறியர்கள்" என்றுதான் சொல்ல தோன்றும். வேலைக்கு போகாமலோ, அல்லது கல்லூரிக்கு போகாமலோ விளையாட்டை பார்க்கபோய் விடுகிறார்கள். அப்படி போகமுடியாமல் போய் விட்டால் தெரிந்தவன், தெரியாதவன் என பாகுபாடில்லாமல் "ஸ்கோர்" என்ன? என்ன? என, சதா கேட்டுக்கொண்டிருப்பார்கள்.வெறும் பத்து நாடுகளே கலந்து கொள்வதென்றால் ஹாக்கி வீரர்களும் கால்பந்து வீரர்களும் கூட அதற்கான உலக கோப்பையை கொண்டு வருவார்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கோப்பை கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. இங்கிலாந்தில் விளையாடும்போதே, எதோ வெளிநாட்டில் விளையாடுவது போன்ற பிரமை அவர்களுக்கு. காரணம் இங்குள்ள பிற நாட்டவர் மைதானத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுதான். அது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரானதாகட்டும் அல்லது இந்தியாவிற்கு எதிரானதாகட்டும் அல்லது பாகிஸ்தானுக்கு அல்லது இலங்கைக்கு எதிரானதாகட்டும். இங்கிலாந்தின் ஒவ்வெரு வீழ்ச்சிக்கும் ஒரே ஆரவாரமும் ஒரே கை தடடலுமாக இருக்கும். இதனால் அவர்கள் நிஜமாகவே சோர்ந்து போய் விடுகிறார்கள். இதை ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் கூட விவாதித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இதில் இங்கிலாந்து கலந்து கொள்ளும் போட்டியை பார்க்க வரும் வெள்ளைக்காரன் கூட இடையில் தன்னை சுத்தி இருப்பவர்களை பார்த்தால் அவனுக்கே சந்தேகம் வரும். நான் இங்கிலாந்தில் இருக்கிறேனா அல்ல வேறெங்கும் இருக்கிறேனாவென? சில வேளை இடையில் எழும்பி போய் விடக்கூட செய்வார்கள். ஆக, இங்கயும் நம்ம ராஜ்யம்தாங்க!
இருந்தாலும் ஒரு பத்து சதவிகிதத்திற்கும் குறைவான நாடுகளே விளையாடும்,
கிரிக்கெட் என்ன உலக விளையாட்டா?