.

Loading...

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பாதிரி...யார்?

பாதிரி...யார்?

நித்யானந்தாவை பற்றிய பரபரப்பு ஓரளவு ஒய்ந்த நேரத்தில் மீண்டும் பத்திரிகைகளுக்கு நல்ல தீனியை வழங்கியிருக்கிறார் திருச்சி பாதிரியார் ராஜ ரெத்தினம். பொதுவாகவே நிறைய பாதிரிமார்களின் மேல் இந்த மாதிரி பாலியல் குற்றசாட்டுக்கள் இருந்தாலும் இது கொஞ்சம் கூடுதலாக திரைப்படத்தில் வருவதை போல உள்ளது.(குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளது) உண்மையிலேயே இவர் அப்படி செய்திருந்தால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கூடவே இந்த மாஜி அருட் சகோதரி ஃபிளாரன்சிற்கும். இவர் நாலு வருடமாக இதை வெளியே சொல்லாமல் இப்போது சொல்லியிருப்பது கொஞ்சம் சந்தேக கேள்விகளை எழுப்புகிறது. இவர் நல்ல பெண்ணாக இருந்திருந்தால் அன்றே இதை போலீசிடம் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதது பெரிய குற்றம். அதுமட்டுமல்ல இதனாலேயே இந்த பாதிரியார், வேறும் பல பெண்களை இதை போல செய்திருக்க வாய்ப்புள்ளது.

இனி பாதிரியார்களைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்:

இன்று உலகம் முழுவதும் சுமார் நான்கு லட்சம் பாதிரியார்கள் உள்ளனர். இவர்களெல்லாம் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் எட்டு வருடங்கள் படித்துதான் பாதிரியாராக ஆனவர்கள். விரும்புபவரெல்லாம் பாதிரியார் ஆகிவிட முடியாது. இந்த எட்டு வருட படிப்பிலே பாதிக்கு மேற்பட்டவர்கள் வெளியே வந்து விடுவார்கள். பின்னர் திருமணமும் செய்து கொள்வார்கள். இப்படி வந்தவர்களில் எனக்கு சில நண்பர்களும் இருக்கிறார்கள். சிலர் இறை பணியை செய்கிறார்கள். சிலர் குடும்பமாக வாழ்கிறார்கள். பிரபல பதிவர் சிறில் அலெக்ஸ் கூட இப்படி வந்தவர் என அவரது வலைப்பக்கத்தில் சொல்லியுள்ளார். இப்படி இடையிலே வந்து விட்டானே! என யாரும் வருத்தபடுவதும் கிடையாது. இதற்கு எட்டு வருடம் படித்து அதன் பின்னர் ஒரு பாதிரியாராகி இந்த இழி செயல்களை செய்வது கவலைக்கிடமான விஷயம்.

என்னுடைய பள்ளி தோழனும் உறவினருமான ஜான் பிரகாசம் இப்படி பாதிரியாரான பின்னர் திருமணம் செய்து விட்டு அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டான். இவன் கோட்டாறு மறை மாவட்டத்திலே இருந்தபோது சில நூல்களைகூட வெளியிட்டு பிரபலமாக இருந்தவன். அதில் ஒன்று நோயா? பேயா? இந்த நூலின் அட்டை படத்தைக்கூட நானும் அவனுமாகத்தன் தெரிவு செய்தோம். இவன் திருமணம் செய்து விட்டான் என கேள்விபட்டதும் என்னால் நம்பக்கூட முடியவில்லை. இப்படி தங்களால் காமத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் பாதிரியாராக இருப்பதை விட பேசாமல் என் நண்பன் செய்ததை போல திருமணம் செய்து கொண்டு வாழ்வது நல்லது. இதனால் இருக்கும் நல்ல பாதிரிமார்களுக்காவது கெட்ட பெயர் வராமலிருக்கும்.

நான் சிறுவனாக இருந்த போது என் பங்கில் இருந்த பாதிரியாரை பெண்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. பொது இடத்தில் வைத்துதான் பேச வேண்டும். இன்று நிலைமை அப்படியா உள்ளது? விட்டால் பைக்கில் வைத்தே கொண்டு போவார்கள். வெள்ளை அங்கியும் அணிவது கிடையாது. முன்பெல்லாம் இடையிலே ஒரு கறுப்பு கச்சையை கூட கட்டுவார்கள். அது இப்போது மறைந்தே போய் விட்டது. இன்றைய தலைமுறைக்கு அப்படி ஒன்று உண்டா? என்றே தெரியாது. ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார்கள். அதே நேரத்தில் இன்னும் மிதி வண்டியில் செல்லும் பாதிரியார்களும் இருக்கிறார்கள். அருட் சகோதரிகளும் இருக்கிறார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் சிக்கனமாக வாழும் பாதிரிகளும் அருட் சகோதரிகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் லண்டனில் எனக்கு தெரிந்த ஒரு வெள்ளைக்கார அருட்சகோதரி கார் பார்க்கிங்கிற்குகூட கையில் பணமில்லாமல் நிற்க எதேச்சையாக அங்கு பார்த்த நான்தான் பணம் கொடுத்து உதவினேன்.

உலகில் துறவி போல வாழ்ந்து தன்னை முழுவதும் கடவுளுக்காக அர்ப்பணித்து இயேசு கிறிஸ்துவின் பாடுகளை (stigmata)அனுபவித்த பாதிரிமார்களும் அருட்சகோதரிகளும் இருக்கிறார்கள். அதை என்னுடைய இந்த பதிவிலே காணலாம். ஆறு வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு பாதிரியார் தாடி இல்லாமல் மீசையுடன் காணப்பட்டார். இதைப்பற்றி கத்தோலிக்க forum ஒன்றில் விவாதித்த போது அமெரிக்காவில் ஒரு காதில் மட்டும் வளையம் போட்ட பாதிரியாரும் உண்டென பதில் வந்தது. ஒருவேளை எதாவது பாப் இசைக்குழுவில் உறுப்பினராய் இருப்பாரோ? என எண்ணினேன்.

இன்னும் சில பாதிரியார்களின் மேல் ஒரு பெரிய குற்றசாட்டு உண்டு. சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல். இவர்களை இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என எண்ணி பிள்ளைகளை விடும்போது, இந்த காமவெறி பிடித்த சிலரால் சிறு பிள்ளைகளும் பாதிக்க படுகிறார்கள். இவர்களுக்காகத்தான் இயேசு கிறிஸ்து இப்படி சொன்னாரோ?

(மத்தேயு 18:6) "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோரில் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது"

11 கருத்துகள் :

Unknown சொன்னது…

அந்த கன்னியாஸ்திரி (முன்னாள்?) குறிப்பிட்ட அந்த பாதிரியாரால் கற்பழிக்கப்பட்டது உண்மை. அது அவர் அனுமதியோடோ அல்லது வல்லுரவாகவோ, எது எப்படியோ தவறு நடந்திருப்பது மட்டும் உண்மை. அந்தப் பெண் அனுமதியோடு இவர் 3 வருடமாக பாலியல் தொடர்பு வைத்திருந்தாலும் திருச்சபை சட்டப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர் தான். ஆனால் இது புகார் செய்யப்பட்டு விட்டதால் உள்ளூர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியதாகிறது. அதை விடுத்து "மாஜி சகோதரி என்பதும், இத்தனை நாள் சொல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்பதும் சாக்குப்போக்கு மனப்பான்மையை தான் காட்டுகிறது. தவறு செய்பவர் தண்டிக்கப்படும்போது நாம் ஏன் கலக்கம் கொள்ள வேண்டும்? மாறாக கத்தோலிக்க மக்கள் தான் தண்டனை பெற்றுத்தருவதில் முன் நிற்கவேண்டும்.

மேலும், வெள்ளை அங்கி எப்போதுமே உடுத்திக் கொள்ளவேண்டும், இடைக்கச்சை கட்ட வேண்டும் என்பதெல்லாம் பழமையை காட்டுகிறது. வெள்ளை அங்கியும், இடைக்கச்சையும் நமது உடை அல்ல. வெளிநாட்டு பாதிரியார்கள் உடுத்தியிருந்த அதே உடையை பின்பற்ற வேண்டிய தேவை இல்லை என்பதை இப்போது தான் இங்கு உள்ள பாதிரியார்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால் இது வரவேற்கப்பட வேண்டிய விடயம் தான். பாலியல் பிரச்சனைகளுக்கும் உடைக்கும் தொடர்பில்லை என்பது என் கருத்து. தாடி இல்லாமல் மீசை வைப்பது ஒன்றும் பாவச்செயல் அல்லவே. இன்னும் பலவித மாற்றங்களுக்கும் கத்தோலிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் வந்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகளை எளிமையாக கையாள முடியும். அதுவே நம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்யும்.

Selvaraj சொன்னது…

Jeyahar said...
மாறாக கத்தோலிக்க மக்கள் தான் தண்டனை பெற்றுத்தருவதில் முன் நிற்கவேண்டும்.

//நிச்சயமாக தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும்//

தாடி இல்லாமல் மீசை வைப்பது ஒன்றும் பாவச்செயல் அல்லவே.

//மீசை வைத்திருப்பது பாவம் என நான் சொல்லவில்லை. மேலே நான் சொன்ன பாதிரியார் கேரளாவை சேர்ந்தவர். அவரை மீண்டும் லண்டனில் ஆறு மாதங்களுக்கு முன்னர் சந்தித்தேன். இப்போது மீசையோடு தாடியும் வைத்திருக்கிறார். என் அழைப்பை ஏற்று என் வீட்டிற்குகூட வந்தார். அவரிடம் நிறைய மாற்றங்கள் இப்போது. என் வலைப்பக்கத்தை கூட அறிமுகப்படுத்தினேன்//

Robin சொன்னது…

பாதிரியார்கள் அல்லது இறைப்பணி செய்பவர்கள் கண்டிப்பாக திருமணம் செயது கொள்ளக்கூடாது என்று பைபிளில் எங்கும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அது ஒரு option ஆகவே வைக்கைப்பட்டுள்ளது. ஒருவர் உண்மையிலேயே திருமணம் செய்யாமல் சிற்றின்பங்களுக்கு இடம் கொடுக்காமல் பணி செய்தால் பராடப்படவேண்டியவரே. அப்படிப்பட்டவர்கள் இன்றும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தக் காலங்களில் எங்கும் இச்சைகளைத் தூண்டும் விதத்தில் சம்பவங்களும் காட்சிகளும் இருக்கும்போது துறவிகளும் கூட விழுந்துவிட நேர்கிறது. என்னை பொறுத்தவரை பாதிரியார்கள் திருமணம் செய்வதோ அல்லது செய்யாமலிருப்பதோ அவர்கள் சொந்த விருப்பம் என்று விட்டு விடவேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற செய்திகள் இனிவரும் காலங்களில் தினமும் வரும். இதனால் ஏற்படும் அவமானம் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கும்தான். மற்றவர்கள் கத்தோலிக்கர்கள் , பிற சபையினர் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.

Selvaraj சொன்னது…

கருத்திற்கு நன்றி ராபின்!

பெயரில்லா சொன்னது…

எப்பேர்பட்ட தவஞானியாலும் உடல் இயக்கத்தையும் சுரப்பிகளின் விவஸ்தைகெட்ட தொல்லைகளையும் தவிர்க்க முடியாது;எனவே மனக் கட்டுப்பாட்டுடன் உணவுக் கட்டுப்பாடும் அவசியமாகிறது;மனுஷனால் இது கூடாதது தான் தேவனால் எல்லாம் கூடும் என்போமா..?

Selvaraj சொன்னது…

chillsam said...
எப்பேர்பட்ட தவஞானியாலும் உடல் இயக்கத்தையும் சுரப்பிகளின் விவஸ்தைகெட்ட தொல்லைகளையும் தவிர்க்க முடியாது;எனவே மனக் கட்டுப்பாட்டுடன் உணவுக் கட்டுப்பாடும் அவசியமாகிறது;மனுஷனால் இது கூடாதது தான் தேவனால் எல்லாம் கூடும் என்போமா..?

//தேவனுக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு, தேவனின் கிருபை இருந்தால், இது சாத்தியமே!//

Unknown சொன்னது…

வணக்கம் Robin.
//பாதிரியார்கள் அல்லது இறைப்பணி செய்பவர்கள் கண்டிப்பாக திருமணம் செயது கொள்ளக்கூடாது என்று பைபிளில் எங்கும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.//
நான் படித்தவரையிலும் இயேசு அது பற்றி தீர்க்கமாக எதுவும் சொல்லவில்லை என நினைக்கிறேன். ஆகவே உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

//அது ஒரு option ஆகவே வைக்கைப்பட்டுள்ளது.//

எங்கே அவ்வாறு option-ஆக வைக்கப்பட்டுள்ளது? இயேசு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது கத்தோலிக்கர்களின் நம்பிக்கை (உங்கள் நம்பிக்கை எப்படி?). ஆகவே கத்தோலிக்க திருப்பணியாளர்களும் திருமணம் செய்வதில்லை. கீழ்க்கண்ட இயேசுவின் வார்த்தைகள் பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்.

"ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார்.
இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார். (லூக்கா 9:61-62)

மேற்படி நீங்கள் சொல்லியுள்ள கருத்தை வரவேற்கிறேன்.

//மற்றவர்கள் கத்தோலிக்கர்கள் , பிற சபையினர் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.//

:)

Unknown சொன்னது…

@ chillsam

//மனுஷனால் இது கூடாதது தான் தேவனால் எல்லாம் கூடும் என்போமா..?//

உங்கள் கருத்து புரிபடவில்லை.

Unknown சொன்னது…

////அது ஒரு option ஆகவே வைக்கைப்பட்டுள்ளது.//

எங்கே அவ்வாறு option-ஆக வைக்கப்பட்டுள்ளது? இயேசு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது கத்தோலிக்கர்களின் நம்பிக்கை (உங்கள் நம்பிக்கை எப்படி?). ஆகவே கத்தோலிக்க திருப்பணியாளர்களும் திருமணம் செய்வதில்லை. கீழ்க்கண்ட இயேசுவின் வார்த்தைகள் பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன். //

please refer St paul there is the refernce

Unknown சொன்னது…

As per catholic believes St.Paul is not the gospel writer!

Robin சொன்னது…

//எங்கே அவ்வாறு option-ஆக வைக்கப்பட்டுள்ளது?// கத்தோலிக்கர்களின் முதல் போப்பாக கருதப்படுபவரும் யேசுகிறிஸ்துவின் பிரதான சீடருமான பேதுரு திருமனமனவர்தான். - (மத்தேயு 8:14)

I கொரிந்தியர் 7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.

சுவிசேஷத்தைப் பிரசங்கித்த ஆதிக்கிறிஸ்தவர்களிடையே திருமணமானவர்களும் உண்டு.

//இயேசு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது கத்தோலிக்கர்களின் நம்பிக்கை (உங்கள் நம்பிக்கை எப்படி?).// குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இயேசு திருமணம் செய்யவில்லை என்பது பைபிளை படிக்கும் அனைவருக்கும் புரியும். இதில் கத்தோலிக்கர், மற்றவர்கள் என்று பாகுபாடு எதற்கு?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!